இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியை அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. தற்போது, அடுத்தடுத்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியனான இந்திய அணியை, தனது முழுமையான பலம் இல்லாத நிலையிலும் வீழ்த்தி அயர்லாந்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பெல்பாஸ்ட்டில் உள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹாரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார். இவருக்கு வலுவான ஒத்துழைப்பு அளித்த பென் காலிட்ஸ், டெக்டருடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவும் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. குறிப்பாக, 11.3 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக களமிறங்கிய ஷிவம் துபே 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட ஹேரி டேக்டர் தனது சுழற் பந்துவீச்சை வீசினார். இதனை ஆர்ஸ்தீப் சிங்கும், ஹர்ஷித் ராணாவும் எதிர்கொண்டனர். கடைசி ஓவர் என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட அவர் ஓயிடு பந்துகளையும், நோ பால்களையும் வீசினார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி ஒரு பௌண்டரியை விளாசியது. கடைசி இரண்டு பந்தில் எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஹெரி டேக்டர் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஹர்ஷித்ராணா சிக்சர் அடிக்க முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் பிரின்ஸ் சிக்ஸர் அடித்தும் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 16 தொடர்களை வெற்றிகரமாக வென்ற நிலையில் அந்த பயணம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.