நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் ரமேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, குன்னூர் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நிதி மூலம் ரூ.10.36 கோடிக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், அடிப்படை வசதிகள் குறைவாகவும், வருவாய் குறைந்த அளவிலும் உள்ள இந்த திருக்கோயிலுக்கு, மருதமலை திருக்கோயில் உபரி நிதியில் இருந்து வட்டியுடன் கூடிய கடன் பெற்று இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் தொடக்கம் இல்லாத சூழலைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கான ஆணை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இந்த திட்டம் குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று திடீரென திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் முடிவால் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.