நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பிய நொய்டா பெண், தற்போது தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டதாகவும், அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
போராட்டத்தின்போது, தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், ஒரு பெண் நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடியை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேச்சு, சட்டப்படி குற்றமாகும்.
போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சலூன் கடையில் வேலை செய்யும் ருச்சிதா சிங் (25 வயது) என்பது தெரியவந்தது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவரும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்தனர்.
இந்த அருவருக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நொய்டாவில் பதுங்கியிருந்த ருச்சிதா சிங்கை போலீசார் நேற்று விசாரித்தனர்.
விசாரணையின் போது, ருச்சிதா சிங் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கோரினார். அதில் அவர், 'போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலால் பிரதமர் மோடிக்கு எதிராக பல மோசமான கருத்துக்களைக் கூறிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன். இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
வாய் கொழுப்பில் பேசியதாகக் கூறப்படும் இந்த பெண், தற்போது தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
