தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஈத்துவக்கும் இன்பம்' என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, ஈகைப் பண்போடு ஏழை எளியோரின் இன்னல்களைத் தீர்க்கும் வகையில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை வழங்கி மகிழ்வதை வாழ்வின் அறமாகக் கொண்டுள்ள இஸ்லாமியப் பெருமக்கள், நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெற வேண்டும் என ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழமான, மேன்மையான, உண்மையான பிணைப்பைக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்வதாகவும், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குவதாகவும் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.