கரூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கினால், அவர்கள் நேர்மையான சாட்சிகளாக இருக்க முடியாது என்பதால், வேலை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது விபத்தா என்ற கேள்விக்கு ஏறக்குறைய ஒரு வருடமாகியும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு, தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 41 உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும், அந்த ஆணையை முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்கவும் நாளை (10.07.2026) கரூர் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க இயலாது என்றும், அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட வாய்ப்புள்ளது என்றும் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால், 41 பேரின் மரணத்திற்கான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாளை கரூரில் நடைபெற உள்ள உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
