தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதனையடுத்து, த.வெ.க. கட்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளை வழங்கியது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை, தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில், 'நம்பியவர்களுக்கு துரோகம் இழைக்கும் முதுகில் குத்திய காங்கிரஸ்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 'இந்திய அளவில் பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்' என இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் – தி.மு.க. இடையே வார்த்தை மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என தெரியாமல், அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான காங்கிரஸை விமர்சிக்க குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்' என்று கூறியுள்ளார்.