கும்பகோணம் அருகே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
பட்டீஸ்வரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இந்த திறந்த வெளி சேமிப்பு கிடங்கில், நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் டன் நெல் சேமிக்கும் திறன் கொண்ட இந்த கிடங்கில், பல மாதங்களாக நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் பல மூட்டைகள் கிழிந்து நெல்மணிகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் பெய்த 11 செ.மீ. மழை காரணமாக, திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் தண்ணீர் தேங்கியது. மழைநீருக்கு நடுவே நெல் மூட்டைகள் நனைந்து கிடக்கும் அவல நிலையைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் மல்கினர்.
‘வியர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை வீணாக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.