தமிழ்நாட்டில் மின்சாரத்துறையே அதிக கடனில் தத்தளிக்கிறது. மின்வாரிய குழுமத்திற்கு மட்டும் சுமார் ரூ.2,47,130 கோடி கடன் சுமை உள்ளது. இதில், மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.1,07,305 கோடியும், மின் உற்பத்தி கழகத்திற்கு ரூ.1,03,128 கோடியும் கடன் என நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மொத்தத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மின்சாரத்துறைக்கு மேற்கொள்ளப்பட்ட சுமார் ரூ.28,217 கோடி மூலதனச் செலவினம் என்பது, ஏறத்தாழ 1,000 கி.மீ. விரைவுச்சாலை அல்லது 30 பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் அல்லது 2,000 பள்ளிக் கட்டிடங்களை உருவாக்கும் அளவுக்கு சமமானது.
மின்சாரத்துறைக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து துறைக்கு ரூ.72,667 கோடியும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூ.27,181 கோடியும் கடன் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் கடன் ரூ.30,965 கோடியாகவும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கடன் ரூ.5,072 கோடியாகவும் உள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாநிலத்தின் உத்தரவாதக் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குடிநீர் வழங்கல் வாரியத்தில் மட்டும் ரூ.7776 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உழைக்கும் வயதுடையோர் மக்கள் தொகை குறைந்து, முதியோர் விகிதம் அதிவேகமாக அதிகரிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து போன்ற திட்டங்களுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவிடப்படுகிறது.