மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த குபேந்திரன் என்ற 17 வயது சிறுவனை, முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொடூர சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று அதிகாலையில், குபேந்திரன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை சூழ்ந்த கும்பல், உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்படுத்தும் வகையில் வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குபேந்திரன் உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை முதல் தளத்திலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த காணொளியில் நீங்கள் காண்பது, மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் ரத்தக் கறைகள் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்கள் தடையின்றி நடமாடுகின்றனர். மாநிலக் காவல்துறை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மேலும், புதிய தவெக அரசும் தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவராமல், களத்தில் அரங்கேறும் கொடூரமான உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது' என்றும் அண்ணாமலை ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.