சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக மற்றும் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பாஜகவின் ஆணைப்படி திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதாக வந்த தகவலால், தவெக உடன் காங்கிரஸ் கட்சி விரைவாக கூட்டணி அமைத்ததாக அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்புடன் செயல்பட வேண்டிய உதயநிதி, பொறுப்பில்லாமல் பேசியுள்ளார் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்து இளைஞரணி கூட்டத்தை கூட்டி காங்கிரசுக்கு எதிராக பேசியுள்ளார் என்றும் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். அவரை துணை முதல்வராக தோளில் சுமந்தது காங்கிரஸ் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மே 4-ம் தேதி மாலை பாஜக மூத்த தலைவர் ஒருவர் அதிமுக, திமுக கூட்டணி அமைக்க தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், இதை அறிந்த காங்கிரஸ் கட்சி மே 5-ம் தேதி டெல்லியில் உயர்நிலை கூட்டம் நடத்தி, மே 6-ம் தேதி தவெக உடன் கூட்டணி என்ற முடிவை அறிவித்ததாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார். அதிமுக – திமுக கூட்டணிக்கு முயற்சி நடந்தது என்பதை சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரும் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திமுக தனது பொய் நாடகங்களை நிறுத்த வேண்டும் என்றும், திமுக விரைவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார். நாடாளுமன்றத்தில் தனியாக இடம் கேட்கும் திமுக மெல்ல பாஜக அருகில் சென்று விடும் என்றும், 2029 நாடாளுமன்ற தேர்தலை அதிமுக, திமுக, பாஜக இணைந்து சந்திக்கும் என்றும் அவர் கணித்தார். இந்த தேர்தலில் போதைப்பொருள், பெண்கள் பாதுகாப்பு முக்கிய பிரச்சினையாக இருந்ததாகவும், மகளிர் பாதுகாப்பு தான் முக்கியம் என முதல்வர் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இண்டியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுக விலகி விட்டது, அதற்கு பதிலாக தவெக இணைந்துள்ளது என்றும், தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை உருவாகி உள்ளது என்றும், இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும் என்றும் அவர் கூறினார். விரைவில் தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டால் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்ந்துள்ளது என்றும், இது மேலும் உயரும் என்றும், பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், வழக்கறிஞர் குப்பையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.