தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், புதிய அதிபர் ரொட்ரிகோ பாஸ் அவர்களின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக நாடு தழுவிய போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. தலைநகர் லா பாஸில் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் பேரணியில் திடீரென பெரும் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சிறிய ரக டைனமைட் வெடிபொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், போராட்டக்காரர்களைக் கலைக்க கண்மூடித்தனமாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, போர்க்களக் காட்சியைக் கண்முன்னே நிறுத்தியது.
சம்பள உயர்வு கோரி ஆசிரியர்களும், புதிய நிலச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஒட்டுமொத்த தலைநகரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. மக்களின் பல்வேறு கோரிக்கைகள் ஒருசேர வெடித்திருப்பதால், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.
தற்போது, 'அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால், தலைநகரில் ராணுவம் குவிக்கப்பட்டு, உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.