இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் கவுதம் அதானி மீது, சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2024-ல் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் நிதி திரட்டியபோது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்ததாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கவுதம் அதானி மறுத்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரவும், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், கவுதம் அதானி 6 மில்லியன் டாலர்களும், அவரது உறவினர் சாகர் 12 மில்லியன் டாலர்களும் செலுத்த மனு அளித்துள்ளனர். மேலும், வழக்கை முன்னெடுத்து செல்ல போதுமான ஆதாரங்கள் அரசு தரப்பிடம் இல்லை என்றும் அதானி குழுமம் தரப்பில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானி மீதான வழக்கை கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தயாராக இருப்பதாக அதானி தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சரணடைந்த பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பேரம் பேசி அதானியை விடுவித்து உள்ளார்' என பதிவிட்டுள்ளார்.