மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ஈரானுக்கு நேரம் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் உடனடியாக செயல்பட வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது. காலம் பொன்னானது!' என அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக முடங்கியுள்ளன. யுரேனியம் கையிருப்பு, தடைகளைத் தளர்த்துதல், போர் இழப்பீடு போன்ற முக்கிய விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தச் சூழலில்தான் அதிபர் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
முன்னதாக, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டன. அதன்படி, பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே ஈரான் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டும் இயக்க வேண்டும், போர் இழப்பீடு கோரிக்கைகளைக் கைவிட வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்படுவதை ஏற்க வேண்டும், மேலும் அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது சொந்த ஐந்து முன்நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. பிராந்தியத்தில், குறிப்பாக லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் நின்றால், ஈரானின் மீதான தடைகள் நீக்கப்பட்டால், முடக்கப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம் என ஈரான் கூறியுள்ளது. மேலும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரியுள்ள ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தனது இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.