சென்னை: அதிமுகவில் தனித்து செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளது. இந்த இணைப்புக்குப் பிறகு, பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். மீதமுள்ள 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். ஆரம்பத்தில், அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இந்தச் சூழலில், பழனிசாமி தரப்பு அதிரடியாக செயல்பட்டு, வேலுமணி அணியில் இருந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்தார். மேலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார். இதற்கிடையே, வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், நேற்று வேலுமணி அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கூட்டாக தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு, ஏற்கெனவே வேலுமணியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க அளித்த மனுவை திரும்பப் பெற்றனர். அதேபோல், வேலுமணி அணியை தகுதிநீக்கம் செய்யக்கோரி பழனிசாமி தரப்பு அளித்த கடிதத்தையும் திரும்பப் பெற்றது.
இதையடுத்து, அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். இந்த முக்கிய சந்திப்புகளில் சி.வி.சண்முகம் மட்டும் இடம்பெறவில்லை. தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்… விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன?