தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் காரணமாக, பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி தவெக-வில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, பெஞ்ஜமின், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இணைந்தனர். தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அமமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோரும் தவெக-வில் இணைந்துள்ளனர்.
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் தவெக-வில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும், தவெக-வுக்கு ஒரு வலுவான பலமாகவும் கருதப்படுகிறது.