இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று (மே 15) திடீரென லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து, தற்போது ரூ.95.50-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்கான முக்கியக் காரணம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படாததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,600 கோடி முதல் ரூ.2,400 கோடி வரை இழப்பைச் சந்தித்து வந்தன. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே தற்போது எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதியை நம்பியுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 2026-ல் இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் இது 9 சதவீதத்தைத் தாண்டக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். டீசல் விலை உயர்வால், சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து, பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் விலையும் உயரும். மேலும், உற்பத்தித் துறை, அந்நியச் செலாவணி கையிருப்பு, ரூபாய் மதிப்பு போன்றவற்றிலும் தாக்கம் ஏற்படக்கூடும்.
இந்நிலையில், பிரதமர் மோடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தியுள்ளார். 'வீட்டிலிருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, தேசத்தின் நலன் கருதி அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம். சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். இது தேசபக்திக்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும்' என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை சரிய வாய்ப்புள்ளது என்றும், இந்த விலை உயர்வு தற்காலிகமானதே என்றும் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.