சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 அதிகரித்துள்ளது. இதைப்போல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், மத்திய கிழக்குப் பகுதியில் தொடரும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம், உலக பங்குச் சந்தையின் நிலை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தக் காரணங்களால், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,100-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று தங்கம் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,330-க்கும், பவுனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை நிலவரம்: இதேபோல், சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,00,000-க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.49 ஆக கடுமையாக சரிந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் குறித்த பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், உலகப் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.