சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக்கை, அவரது காதலியை வைத்து சினிமா பாணியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19 வயது) மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 11 ஆம் தேதி காசிமேடு பகுதியில் சுற்றித்திரிந்தபோது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, போலீசார் சற்று அசந்த நேரத்தில், கை விலங்குடன் தப்பித்து தலைமறைவானார்.
தப்பித்த அபிஷேக், விம்கோ நகரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி, அங்கிருந்து ஒரு பையையும், செல்போனையும் பெற்றுக்கொண்டு கோயம்பேடு வழியாக புதுச்சேரிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார், அபிஷேக் பயன்படுத்திய செல்போனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலியுடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உதவியுடன் அபிஷேக்கை தொடர்புகொண்டு, உடனடியாக சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளனர். காதலி மீதுள்ள நம்பிக்கையில், புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அபிஷேக் வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், பேருந்தில் இருந்து இறங்கிய அபிஷேக்கை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, காதலி மூலம் சினிமா பாணியில் போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.