நீண்ட மாதங்களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்வு இல்லாத நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்றம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால், நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக ரூ.3.14 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ.3.11 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்போது ரூ.103.90 ஆகவும், டீசல் விலை ரூ.95.47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அன்றாட தேவைகளுக்காக வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.