கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், மாநிலத்தின் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் பொறுப்பேற்க உள்ளார். அரசியலில் அவர் கடந்து வந்த பாதை, அவரது போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் குறித்து விரிவாகக் காண்போம்.
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் யுடிஎஃப் கூட்டணி 102 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டும் 63 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் முக்கிய கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆட்சி அமைக்கத் தேவையான 71 இடங்களைவிட 31 இடங்கள் கூடுதலாகப் பெற்று, யுடிஎஃப் கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்வது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகியோரிடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவாலாக இருந்தது. இறுதியில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக, அதாவது மாநிலத்தின் முதல்வராக வி.டி.சதீசன் நியமிக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, மே 18-ம் தேதி வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 1964-ம் ஆண்டு மே 31-ம் தேதி பிறந்தவர் வடசெர்ரி தாமோதர சதீன். இவர் தனது ஆரம்பக் கல்வியை பனங்காடு உயர்நிலைப் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தேவராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியிலும், சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தை ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர், கேரள சட்ட அகாடமி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பையும், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதுகலைச் சட்டப் படிப்பையும் நிறைவு செய்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
கல்லூரிப் பருவத்திலேயே இவரது அரசியல் பயணம் தொடங்கியது. சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் மாணவர் சங்கப் பொறுப்பாளராகவும், எம்ஜி பல்கலைக்கழக சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ல் தேசிய செயலராகப் பணியாற்றினார்.
1996-ல் பரவூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தனது முதல் தேர்தல் அனுபவத்தைப் பெற்றார் வி.டி.சதீசன். இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த பரவூரில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ராஜுவிடம் 1,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும், இந்தத் தோல்வி அவரைப் பாதிக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்.
2001-ல் மீண்டும் பரவூர் தொகுதியில் போட்டியிட்ட சதீசன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ராஜுவை 7,434 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து செயல்படும் இவரது அணுகுமுறை, பரவூர் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இதன் விளைவாக, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து ஆறு தேர்தல்களில் பரவூர் தொகுதி மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வித்தியாசத்தை அதிகரித்து, எதிராளிகளைத் திணறடித்தார்.
தொடர் தேர்தல் வெற்றிகளைப் பெற்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்குள் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது சவாலாகவே இருந்தது. 'மணப்பெண்ணின் தோழி'யாகவே இருக்கிறார் என்று சக கட்சியினரால் கிண்டல் செய்யப்பட்டார். கேரள மாணவர் சங்கத் தலைவர், கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், அமைச்சர் பதவி என பல முக்கியப் பதவிகளை அவர் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் கட்சிப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, விசுவாசத்துடன் செயல்பட்டார். அதன் பலனாக, கேரள சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், தமிழ்நாடு காங்கிரஸுக்கான மேலிடப் பொறுப்பாளர், கேரள காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. மூத்த தலைவர் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாகவும், 2021-ல் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தபோது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில், தரவுகளின் துல்லியத்துடன் பினராயி விஜயன் அரசின் தவறுகளையும், குறைகளையும் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார். இவை 'துல்லியத் தாக்குதல் அரசியல்' எனப் பாராட்டப்பட்டன. இவரது இந்த அணுகுமுறை, இவரது தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டி, இவரது புகழை அதிகரித்தது. கோஷ்டி அரசியலில் ஈடுபடாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் நிலைப்பாடுகளை எடுக்கும் இவரது குணம், அமைப்பின் ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டு செயல்படும் பண்பு ஆகியவை அவரை ஒரு திறமையான தலைவராக கட்சிக்குள்ளும் வெளியிலும் அடையாளப்படுத்தியது.