சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 'இந்த தேர்தலில் நடந்திருப்பது ஒரு புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 'இந்த சுனாமி என்பது சாகசமோ, சாதனையோ அல்ல. இது ஒரு பெரும் பாதிப்பு. தமிழ்நாட்டின் நலன்களை கடுமையாக பாதித்திருக்கக்கூடிய ஒரு பேரழிவு இது. இந்த பேரழிவில் இருந்து தமிழ்நாட்டு மக்களை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
தோல்வியின்போது ஆதங்கப்படுவது இயல்புதான் என்றாலும், அதை பழியாக மாற்றக்கூடாது என்று ஸ்டாலின் கூறினார். மாவட்டச் செயலாளர்களின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை என்றாலும், அவர்களே அனைத்திலும் முக்கியம் என்ற நிலை வரக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். ஒரு கட்டிடத்திற்கு அனைத்து தூண்களும் முக்கியம் என்பதைப் போல, அனைவரும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நம்முடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் உருவாக்கிய திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால் வெற்றி சாத்தியமில்லை. அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முழுப் பங்களிப்பைத் தரும் வகையில் அவர்களை நாம் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.