திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தீபா தாஸ்முன்ஷி, 'மே 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவரைத் தேர்வு செய்யும் முழு அதிகாரமும் காங்கிரஸ் தலைவருக்கே வழங்கப்படுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினார். அனைவரின் கருத்துகளின் அடிப்படையில், வி.டி.சதீசன் கேரள காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் தகுதியைப் பெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரளாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டு, ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா, சன்னி ஜோசப், கே.சி. வேணுகோபால் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்ததாகக் கூறப்பட்டது. இதனால், முதல்வர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், தற்போது வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் அவரது தலைமையில் கேரளாவில் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.