சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் அதிநவீன சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலையான NH44, காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்கிறது. குறிப்பாக, பஞ்சாப் முதல் காஷ்மீர் வரையிலான இந்த சாலையில் ராணுவ வாகனப் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகள், பஞ்சாப் எல்லையில் உள்ள NH44 நெடுஞ்சாலையில் அதிநவீன சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்கு நேரலையாக காட்சிகளை அனுப்பி வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இரு வாரங்களுக்கு முன்பு மாநில எல்லைக்குட்பட்ட NH44 நெடுஞ்சாலையில் சில சிசிடிவி கேமராக்களைக் கண்டுபிடித்தனர். இவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை, சூரிய ஒளியில் இயங்கக்கூடியவை என்பது தெரியவந்தது.
இந்த கேமராக்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ வாகனங்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளின் வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. குறிப்பாக, சாலையின் பாலங்கள், முக்கிய சந்திப்புகள், சில கடைகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் சுமார் 7 மாதங்கள் வரை உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
இது தொடர்பாக, பஞ்சாபின் பதான் கோட் அருகே உள்ள சக் தார்வால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், துபாயை சேர்ந்த சிலரின் உத்தரவின் பேரில் கேமராக்களைப் பொருத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது கூட்டாளிகளான விக்ரம்ஜித் சிங், பல்வீந்தர் சிங், தரன்ப்ரீத் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். கைதான பல்ஜித் சிங்குக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
