மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரமான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக, மும்பையில் பேருந்து போக்குவரத்து மட்டுமின்றி, புறநகர் ரயில் சேவைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும், சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை, தானே, பால்கர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை பல்கலைக்கழகம் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மும்பை மற்றும் புனே இடையேயான ரயில் வழித்தடத்தில், குறிப்பாக கர்ஜத்-லோனாவாலா போர் காட் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்ததன் காரணமாக, இன்று அதிகாலையில் ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சூழல் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'மும்பை-புனே மலைப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்தது தொடர்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரயில் சேவைகளையும் விரைவாகச் சீரமைப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளை ஒரே அணியாக இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.
இந்திய வானிலை மையம், மும்பை, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், அவசர தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
