கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ஒட்டிய வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக, காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் தண்ணீர் தேடி சாலையைக் கடந்து ஒரு வனப்பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்குச் செல்கின்றன.
ஆகையால், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் சாலையைக் கடப்பதைப் பார்த்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய வேண்டாம். யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வரை காத்திருந்து, அதன் பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும் என்று அதிரப்பள்ளி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.