சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது என பதிவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும்போது, அவர்களை அமர வைத்து பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரியின் மேசைக்கு முன்பும் பொதுமக்களுக்காக குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை நிற்க வைத்து அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையை மீறி, பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது சிசிடிவி கண்காணிப்பு மூலம் கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வந்ததையடுத்து, பதிவுத்துறை தலைவர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் வசதிக் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல், அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் அமரவைக்கப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.