தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது அதிரடி நேர மேலாண்மை மூலம் தலைமைச் செயலக அதிகாரிகளைப் பிரமிக்க வைத்துள்ளார்.
தினமும் காலையிலேயே தலைமைச் செயலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து சாப்பிடும் அவரது எளிய வழக்கம் தற்போது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திரைத்துறையில் துல்லியமான டைம் மேனேஜ்மெண்ட்க்குப் பெயர்பெற்ற விஜய், தற்போது அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்.
முந்தைய ஆட்சிக்காலங்களில் முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் நேரமும், அதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. ஆனால், முதல்வர் விஜய் முன்பாகவே தலைமை செயலகத்திற்கு வந்துவிடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு, எந்தவித பந்தாவும் இன்றி அரசு ஊழியர் போல் நேரத்தோடு வருவது, மதிய உணவை பாக்ஸில் எடுத்து வந்து சாப்பிடுவது போன்ற எளிய செயல்களைப் பார்த்து மூத்த அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரும் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அதிகாரத்தின் அடையாளமாக நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்வர் விஜய் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், வெள்ளை துண்டை முதல்வர் அகற்றியது தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.