மத்தியப்பிரதேசத்தின் தார் நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க போஜ்சாலா வளாகம், இந்துக்களால் வாக்தேவி (சரஸ்வதி) கோயிலாகவும், முஸ்லிம்களால் மவுலானா கமலூத்தீன் மசூதியாகவும் உரிமை கோரப்பட்டு வந்தது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஜ்சாலா ஒரு வாக்தேவி கோயிலே என்றும், அங்கு முஸ்லிம்களின் தொழுகை நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி சிலையையும் போஜ்சாலாவில் நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ம.பி முதல்வர் மோகன் யாதவ், சரஸ்வதி சிலையை மீட்டு வந்து போஜ்சாலாவில் நிறுவ சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், 'மன்னர் போஜ், வாக்தேவி திருவுருவத்தின் மூலம் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டினார். நீதிமன்றம் அதை அங்கீகரித்துள்ளது. போஜ்சாலாவின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வாக்தேவி சிலையைத் திரும்பக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்படும். அயோத்தி கோயில் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக அமைந்தது. அந்த மரபைப் பின்பற்றி, போஜ்சாலா தீர்ப்பையும் ஏற்பதன் மூலம் மத்தியப் பிரதேசம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும்' எனத் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை விஷ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. அதன் சர்வதேசத் தலைவர் அலோக் குமார், 'போஜ்சாலா மீதான இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் கலாச்சார உணர்வு, உண்மை மற்றும் சனாதன மரபு ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரம். இது முறையான நீதித்துறை செயல்முறைகளைப் பின்பற்றியே வெளியாகி உள்ளது. போஜ்சாலா சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் மற்றும் சமஸ்கிருத கல்விக்கான மையமாக திகழ்ந்தது என நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது' என்று கூறினார். இந்து தரப்பு மனுதாரர் ஆஷிஷ் கோயல், 'வரலாற்றுச் சூழல்களின் காரணமாகவே போஜ்சாலாவில் தொழுகை நடத்தும் வழக்கம் உருவானது. இந்த உண்மையை நிலைநாட்ட நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தோம்' என்றார்.
முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இந்த தீர்ப்பின் மீது கருத்து தெரிவிக்கையில், 'போஜ்சாலா இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னம். அத்தகைய சின்னத்திற்குள் இந்து முறைப்படி பூஜையோ அல்லது இஸ்லாமிய முறைப்படி தொழுகையோ நடத்த அனுமதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு. வாரணாசி கியான்வாபி, சம்பல் ஷாஹி ஜாமா மசூதி, மதுரா கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன' என சுட்டிக்காட்டினார்.
1875ல் பிரிட்டிஷ் பிரதிநிதி மேஜர் ஜெனரல் வில்லியம் கைக் நடத்திய அகழ்வாராய்ச்சியில் வாக்தேவி சிலை கண்டெடுக்கப்பட்டது. 1903ல் கர்சன் பிரபு அதை லண்டன் அருங்காட்சியகத்தில் வைத்தார். 128.5 செ.மீ உயரமும், 58.6 செ.மீ அகலமும் கொண்ட இந்த 250 கிலோ எடைள்ள சிலை, நான்கு கரங்களுடன், நேர்த்தியான கிரீடம் மற்றும் சிகை அலங்காரத்துடன் தெய்வீகத் தன்மையுடன் காட்சியளிக்கிறது. சிலை அடிப்பாகத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, வரருச்சி என்பவர் வாக்தேவி சிலை உட்பட மூன்று சிலைகளைச் செதுக்கப் பணித்ததாகக் கூறுகிறது.