புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல், வேகத்தடை இன்றி சீராக கடந்து செல்ல உதவும் பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை, குஜராத் மாநிலம் பரூச் சுங்கச்சாவடியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வரிசையில், டெல்லியில் நகர்ப்புற விரிவாக்கச் சாலை 2-ல் அமைந்துள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில், 'பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல்' முறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "இந்த எம்எல்எஃப்எஃப் (MLFF) அமைப்பு சுங்கக் கட்டணத்தை தானாகவே வசூலிப்பதுடன் மட்டுமல்லாமல், சீட்-பெல்ட் அணியாமல் இருத்தல், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுதல் போன்ற பிற போக்குவரத்து விதிமீறல்களுக்கு சலான்களை வழங்கவும் உதவும். இந்த முறை எதிர்காலத்தில் பரந்த அளவிலான போக்குவரத்து அமலாக்கத் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் பேசுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், நாடு முழுவதும் சுமார் 1,300 சுங்கச்சாவடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது" என்று கூறினார்.