சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும், கட்சிகளிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை நீடிக்குமா அல்லது பருவமழை தொடங்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை கேட்டுள்ளோம். அந்த அறிவிப்பு வெளியான பிறகு, பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னரே இறுதி தேதி அறிவிக்கப்படும். பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் வழக்கம் போல் தொடரும்' என்றும் அவர் உறுதியளித்தார்.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், வானிலை அறிக்கையை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி இறுதி செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்யின் முடிவுக்குப் பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும்.