தமிழ்நாட்டில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள திருக்கோவில்களில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் உள்ள கோவில்களை முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி வழிபாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி பெறும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், அங்கு 20-க்கும் மேற்பட்ட சேவைகள் பழைய கட்டணத்திலேயே நீடிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிர்வாக ரீதியாக சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால், அதனை சரிசெய்ய ஏற்கனவே கட்டண உயர்வை அதிகாரிகள் பரிசீலித்து வைத்திருந்தனர். அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்தப்போவதில்லை என்றும், அவர்களின் கருத்தை மீறி இந்த அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும், பொதுமக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் இந்த அரசாங்கம் நடக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.