சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேஸ் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூட்கேஸ் அதிக பாரமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த உடலின் கை, கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டிருந்தன. உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன், சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ரயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. தலை, கை, கால்கள் இல்லாத வாலிபர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர், தலை, கை, கால்கள் இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.