காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியான செய்திக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சிகளில் நடனமாட வைப்பது, பள்ளி மாணவர்களை வைத்து தவெக தலைவர் விஜய் பாடல்களுக்கு நடனமாட வைப்பது என கல்விக்கூடங்களை அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இடமாக மாற்றுவது தவெக-வின் கொள்கையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்புகிறார். ஆனால், இது போன்ற செயல்களுக்கு அவர் என்ன பதில் கூறப் போகிறார்? என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளன. திரைப்பட வசனத்தைப் போல, 'அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!' என்ற பாணியில் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்திய பிறகும் இதுபோன்ற செயல்கள் தொடர்வது எந்த வகையில் நியாயம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவர் திரு. விஜய் அவர்களே, தொடர்ந்து பள்ளிச் சிறார்களை குறிவைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இதுகுறித்து நீங்கள் கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் இது போன்ற அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்விக்கூடங்கள் அரசியல் மேடைகளாக மாறுவது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.