வாகனங்களுக்கான சிறப்பு பதிவெண்களை ‘பேன்சி’ எண்கள் என்று அழைக்கின்றனர். இந்த எண்களை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வரைவு அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு அடுத்த ஷாக்காக அமைந்துள்ளது.
புதிய கட்டண விதிகளின்படி, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு மற்றும் பதிவு எண்களுக்கு, தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு 80,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 மற்றும் 14வது வரிசையில் உள்ள சிறப்பு எண்களைப் பெற, 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில், 2,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உயர்த்த உள்ள இந்த கட்டணங்கள், தற்போதுள்ள கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்த திடீர் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.