சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தான் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை விளக்கினார். ‘நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அது வெறும் ரீல் தான், ரியல் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். பெரியாரின் கொள்கைகளில் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்றாலும், பெண் கல்வி, சமூக நீதி போன்றவற்றை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவதாகவும், பெருந்தலைவர் காமராஜரின் நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோது மக்களுக்கு துணையாக நின்றதாகவும், பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக இருந்ததாகவும் விஜய் கூறினார். 2008-இல் ஈழத்தமிழர் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் அன்றே கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு துணையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
2009-இல் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்ததாகவும், திரைப்படங்களில் சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியதாகவும் கூறினார். 2011-இல் மீனவர்கள் ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தியதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், இப்படி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்ததாகவும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.