தமிழ்நாடு சட்டமன்றத்தின் 4 நாட்கள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
“மக்கள் பணியை செய்வது தான் நமது கடமை. கருத்தால் வேறுபட்டாலும், மக்கள் நன்மை சார்ந்து ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்று தனது உரையைத் தொடங்கினார் முதலமைச்சர் விஜய். மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமன்றம் வந்துள்ளோம் என்றும், ராஜினாமா செய்தாலும் தங்களை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும், தனது அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், தாங்கள் ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சிலர் சித்தரிப்பதாகவும், அது வெறும் ரீல் தான், ரியல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்ததாகவும், பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் அன்றே கோரிக்கை வைத்ததாகவும், கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு துணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
பெரியார் சொன்னதில் ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டதாகவும், அவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை என்றும், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அறிவித்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். பெண் கல்வி, சமூக நீதி போன்ற பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாகவும், அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவதாகவும், பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.