மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இதனால், அந்த அணியின் வீராங்கனைகள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் வஹாப் ரியாஸ் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, தனது லீக் போட்டிகளில் இந்தியா, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இத்தோல்வி ஒருபுறமிருக்க, தொடரின் போது வீராங்கனைகள் பயிற்சிக்குச் செல்லாமல் உணவகங்களில் நேரத்தைக் கழித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப், 'பல ஆண்டுகளாக விளையாடி வரும் மகளிர் அணி, ஐசிசி தொடர்களில் ஏன் இன்னும் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை? நாம் ஏன் அவர்களைக் கேள்வி கேட்கக் கூடாது?' என்று ஆதங்கப்பட்டுள்ளார். முன்னாள் பயிற்சியாளர் கபீர் கான் கூறுகையில், 'பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளும் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் மன வலிமை இல்லை. அதனால் தான் எளிய இலக்குகளைக் கொண்ட போட்டிகளில்கூட வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் மோசமாகத் தோற்றுப் போகிறார்கள்' என்று சாடியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் பிசினஸ் கிளாஸ் பயணம், உயர்தர வசதிகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் என அனைத்தும் சமமாக வழங்கப்படுகின்றன. இதில் எந்த பாகுபாடும் இல்லை' என்றார். ஆனால், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சலீம் ஜாபர், சமூக மற்றும் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பெண் வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், மேலாளர் இல்லாமல் தனியாகப் பேச முடியாத கட்டுப்பாடு போன்ற சமூகத் தடைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.