தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகரைச் சந்தித்த பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களான ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், 'எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கான கையெழுத்தைப் போட்டுள்ளோம். அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம்' என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க. தி.மு.க.வுடன் கூட்டணி பேசியதாக சி.வி. சண்முகம் அவதூறான, தவறான தகவலைப் பரப்பி வருகிறார். தனது சொந்த லாபத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு அவதூறு பரப்புவதாகவும், அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையிலேயே சி.வி. சண்முகம் இப்படிப் பேசுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையே அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது என்றும், அ.தி.மு.க.வின் பிளவை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'அ.தி.மு.க.வின் கொறடா நான்தான். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு மீது நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. எதிராக வாக்களிக்கும். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதிபடத் தெரிவித்தார்.