திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல்லிகோட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (21), ரமேஷ் (22) மற்றும் சீவலப்பேரியைச் சேர்ந்த முத்துராமன் (24) ஆகியோர் பிடிபட்டனர்.
சோதனையின் போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக மானூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், பிரேம்குமார், ரமேஷ், முத்துராமன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

