ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி, மக்களின் வாங்கும் முறையை பெருமளவில் மாற்றியுள்ளது. சிறிய பொருட்கள் முதல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெறும் வசதி தற்போது உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பாலியல் சார்ந்த ஒரு பொருளை ஆர்டர் செய்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பூஜா ஜோஷி என்பவர் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பூஜா ஜோஷி தனது பதிவில், 'ஒரு பெண்ணாக எனக்கு மிகவும் வேதனையான அனுபவம் ஏற்பட்டது. பாலியல் சார்ந்த ஒரு பொருளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தேன். அதை டெலிவரி செய்ய வந்த நபர் என்னை உற்றுப் பார்த்தார். இதனால், பார்சலை வாங்கிக்கொண்டு உடனடியாக கதவை மூடிவிட்டேன். உள்ளே சென்ற பிறகுதான் பார்சல் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை கவனித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த டெலிவரி நபரிடமிருந்து பூஜாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், 'இந்த பொருட்களை எல்லாம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? அதெல்லாம் வேண்டாம். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரே மஜாவாக இருக்கும்' என்று அவர் கூறியதாக பூஜா தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜா, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டெலிவரி நபர் மன்னிப்பு கேட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனம் பூஜாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், அந்த டெலிவரி நபரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக பூஜா பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் பாலியல் சார்ந்த பொருளை ஆர்டர் செய்கிறார் என்பதற்காக அவரை துன்புறுத்தவோ, பாலியல் ரீதியான பலனை அடையவோ யாருக்கும் உரிமை இல்லை என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.