2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் ஒரு கட்டத்தில் 260 – 280 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணி, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 243 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
முல்லான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஹைதராபாத் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இவருக்குத் துணையாக துருவ் ஜூரல் 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அசத்தினார். இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவிலேயே 200 ரன்களைக் கடந்துவிட்டது.
15 ஓவர் வரை அசுர வேகத்தில் இருந்த ராஜஸ்தான் அணி, ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 14-வது ஓவரில் துருவ் ஜூரல் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ராஜஸ்தான் அணியைக் கட்டுப்படுத்தினர். கேப்டன் ரியான் பராக் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரேரா 9 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் குறிப்பாக பிரபுல் ஹிஞ்சே 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தாலும், முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சரிவை ஏற்படுத்தினார். ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 64 ரன்களை வாரி வழங்கினார். ராஜஸ்தான் அணி கடைசி 5 ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்ததால் 243 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.