நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தின் எதிரொலியாக, என்டிஏ அமைப்பில் புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவை இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை, நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது, நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் என்டிஏ-வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த முறைகேட்டில் என்டிஏ அதிகாரிகளின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சிபிஐ இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், என்டிஏ-வின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், இந்திய வருவாய் துறையைச் சேர்ந்த 4 மூத்த அதிகாரிகள் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ருச்சிதா விஜ், ஆகாஷ் ஜெயின், அனுஜா, மற்றும் ஆதித்ய ராஜேந்திர போஜ்காடியா ஆவர். இவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்டிஏ-வில் முக்கிய பொறுப்புகளை வகிப்பார்கள்.
முன்னதாக, என்டிஏ-வின் தலைவராக பிரதீப் குமார் ஜோஷி (முன்னாள் யுபிஎஸ்சி தலைவர்) மற்றும் இயக்குநராக அபிஷேக் சிங் (மூத்த ஐஏஎஸ் அதிகாரி) ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்எஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், ஜேஎன்யூ துணை வேந்தர், நாக் தலைவர் உள்ளிட்ட பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த புதிய நியமனங்கள் என்டிஏ-வின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.