தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் எந்த சமரசமும் இன்றி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக, பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழி திட்டம் போன்றவற்றை முந்தைய திமுக அரசு ஏற்கவில்லை என்றும், அதே நிலைப்பாட்டை தற்போதைய திமுக அரசும் பின்பற்றும் என நம்புவதாகவும், அதை வலியுறுத்துவதாகவும் வைகோ கூறினார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய வைகோ, நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டினார். 22 லட்சம் மாணவர்கள் தயாரான நிலையில் தேர்வுத்தாள் கசிந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளை விட தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்தில் பல இடங்களில் இருப்பதாகவும், அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டுக்குப் பிறகு வெளியாகும் என அமைச்சர் கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.