முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இதுவரை காவல் நிலையத்தில் தோன்றவில்லை. இதனால், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகத் தவறினால், இருவரையும் கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
