உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் பெறாமல் ரசாயனங்களைக் கலந்து தேயிலை தயாரித்து வந்த ஒரு தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், சுமார் 15 கிலோ கலப்பட தேயிலை மற்றும் போலி லேபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஷாபூர் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த தேயிலை தயாரிப்பு நிறுவனம், பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் வகையில், தரமற்ற ரசாயனங்களை பயன்படுத்தி தேயிலையை உற்பத்தி செய்து வந்துள்ளது. இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக களமிறங்கி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, தொழிற்சாலையில் உரிமம் எதுவும் முறையாக பெறப்படவில்லை என்பதும், சுகாதாரமற்ற முறையில் தேயிலை தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சந்தையில் விற்பனை செய்வதற்காக போலியான லேபிள்களை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இது போன்ற கலப்பட மற்றும் சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
