தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷ்னி (18), நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் தீவிர பயிற்சி பெற்று வந்த மாணவி, நீட் மறுதேர்வு நெருங்கி வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ரோஷ்னி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 21) நடைபெறவிருந்த நீட் மறுதேர்வுக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் இந்த தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு முன்னர், மே 3 அன்று நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து போன்ற நிகழ்வுகளும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த அனுகீர்த்தனா, சேலத்தைச் சேர்ந்த கோபிகா போன்ற மாணவிகளும் நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே விபரீத முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.