கரூர் மாவட்டத்தில், கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரைச் சேர்ந்த ரமேஷ், கரூர் மாவட்ட திமுக நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் சரண்ஜித் நிகில் (18), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன் படித்து வந்தார்.
சம்பவத்தன்று, சரண்ஜித் நிகில் தனது நண்பர்கள் 7 பேருடன் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அமைந்திருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சரண்ஜித் நிகில் கிணற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கியுள்ளார்.
நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மூழ்கிய சரண்ஜித் நிகிலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.