திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் பகுதியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று (மே 23) திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திருநெய்ப்பேர் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
திடீரென பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.