சேலம் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி! பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வெறும் 58 பைசா வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களின் கீழ், சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய விரும்புவோருக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் இந்த கடன் உதவி அளிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டுக் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும் இக்கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் பெற, விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 லட்சத்திற்கு மிகாமலும், 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சிறு வர்த்தகம், விவசாயம், கைவினைப் பொருட்கள் போன்ற தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.25.00 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் 7% முதல் 8% வரை இருக்கும். கடனை 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
சுய உதவிக் குழுக்களுக்கான குழுக் கடன் திட்டத்தின் கீழ், ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரையும், குழுவிற்கு ரூ.25.00 லட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். இந்தக் கடனை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000 வீதம், 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000 வரை 7% வட்டி விகிதத்தில் 3 ஆண்டு கால அவகாசத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
கல்வி கடனுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வட்டி விகிதம் 8% ஆகும். மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளுக்கு கடன் வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். கடன் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் கழகத்தின் இணையதளமான http://tabcedco.net முகவரியில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அறை எண்.110), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.