மகாராஷ்டிராவில், காதலுக்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த வருங்கால கணவனையே கொலை செய்த இளம் பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகன் கேதன் அகர்வால் மற்றும் சியா பிரவீன் கோயல் ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இவர்களது திருமணத்திற்காக சுமார் 17 கோடி ரூபாய் செலவில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றில் முன்பதிவுகள் செய்யப்பட்டு, 40 சொகுசு அறைகளும் புக் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று கூறி, கேதனை லோகட் கோட்டைப் பகுதிக்கு வருமாறு சியா வற்புறுத்தியுள்ளார். குடும்பத்தினர் முதலில் மறுத்தாலும், சியாவின் பிடிவாதத்தால் அவர்கள் சம்மதித்துள்ளனர்.
கடந்த ஜூன் 18 அன்று, தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வருங்கால கணவர் கேதனுடன் இணைந்து திருமணத்திற்கு முந்தைய 'ப்ரீ-வெட்டிங் போட்டோசூட்' நடத்த சியா திட்டமிட்டுள்ளார். இதற்காக இருவரும் புனேவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோகட் கோட்டைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள மலைப்பகுதியில் தனியாகப் புகைப்படம் எடுக்கலாம் என கேதனை அழைத்துச் சென்ற சியா, அவரை ஒரு தனி இடத்திற்கு வரவழைத்துள்ளார். காலை சுமார் 10:45 மணியளவில், கேதன் அகர்வால் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டதாக சியாவின் தாய், கேதனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கேதனின் உடல் மீட்கப்பட்டது, ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
துவக்கத்தில் இது ஒரு சாதாரண விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், சம்பவ இடத்திலிருந்த சியாவின் பதற்றமான நடவடிக்கைகள் மற்றும் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது, சியா ஏற்கனவே சேத்தன் சவுத்ரி என்ற இளைஞரைக் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. பெற்றோரின் வற்புறுத்தலால் கேதனுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை நிறுத்த சியா தனது காதலனுடன் சேர்ந்து கேதனைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியுள்ளார். இருவரும் கடந்த சில மாதங்களில் மட்டும் 2,004 முறை போனில் பேசியதும், கிட்டத்தட்ட 238 மணி நேரத்தை இந்தச் சதித்திட்டத்திற்காகச் செலவழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பாகவே கேதனைக் கொலை செய்ய அவர்கள் போட்ட இரண்டு திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. இறுதியாக, ஜூன் 18 அன்று, சியாவும் மறைந்திருந்த அவரது காதலன் சேத்தனும் சேர்ந்து கேதனை 350 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தற்போது சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் புனே போலீசார் கைது செய்து, இந்த கொலைச் சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.